Pages

Wednesday, October 14, 2020

5 மதிப்பெண் வினா தேம்பாவணி வீரமாமுனிவரின் கவிதாஞ்சலி

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

தேம்பாவணி

கருணையின் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்து விட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி, ஆறுதல் அளிப்பதை வீரமாமுனிவர் படம் பிடித்துக் காட்டுகிறார்.

கருணையனின் கண்ணீர்!

கருணையின் தன் பூப்போன்ற கைகளைக் குவித்து, "பூமித்தாயே! என் அன்னையின் உடலை அன்போடு காப்பாயாக" என்று வணங்கினான். மலர்ப்படுக்கையில் அன்னையின் உடலை அடக்கம் செய்து, அதன்மீது பூக்களையும் கண்ணீரையும் பொழிந்தான்.

கருணையனின் புலம்பல்

"தாயின் மணி போன்ற வாய்மையை மழைநீராகப் பருகி, அன்னையின் மார்பில் மாலையாக மனமகிழ்ந்து வாழ்ந்தேன்.  மணி போன்ற மழைத்துளியின்றி பயிர் வாடியது போல வாடுகின்றேன்.  கொம்பில் கொய்த மலராக வாடுகின்றேன். நஞ்சுதடவிய எரியும்அம்புதுளைத்த புண்ணின் வேதனையை அனுபவிக்கின்றேன்துணையைப் பிரிந்த பறவையைப் போல வாடுகின்றேன். வழுக்கு நிலத்தில் வழிதவறியவன் போல் ஆனேன். 

உயிர் பிழைக்கும் வழி அறியேன்.  உணர்விழந்த உறுப்பின் தன்மை அறியேன்.  உணவு தேடும் வழி அறியேன்.  கானில் செல்லும் வழி அறியேன்.  தாய் காட்டிய வழி அறிவேன். தாயும் என்னைத் தவிக்க விட்டுப் போனாள்" என்று நவமணிமாலை போன்று நல்லறத் தவத்தை அணிந்த கருணையன் புலம்பினான்.

கருணையன் புலம்பலுக்கு இரங்கியவை

தேன்சிந்தும் மரங்களிலும் மணமலர்ச் சுனைகளிலும் உள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையனின் புலம்பலுக்கு இரங்கி, அழுவன போன்று ஒலித்தன.

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள உவமைகள்:

  1. பூப்போன்ற கைகள்
  2. மணி போன்ற வாய்மை
  3. மணி போன்ற மழைத்துளி
  4. மழையின்றிப் பயிர் வாடியது போல
  5. கொம்பின் கொய்த மலரைப் போல
  6. துணையைப் பிரிந்த பறவையைப் போல
  7. வழுக்கு நிலத்தில் வழிதவறியவன் போல
  8. நவமணிமாலை போன்று நல்லறத் தவத்தை அணிந்த
  9. கானம் கொல் என்று ஒலித்து அழுவது போன்று.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள உருவகங்கள்:

  1. பூமித்தாய்
  2. வாய்மையே மழைநீராக.

-மலர் மகேந்திரன்

No comments:

Post a Comment