Thursday, October 15, 2020

2 மதிப்பெண் வினாக்கள், இயல் 9

 இயல் 9

2 மதிப்பெண் வினாக்கள்


1). நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. - இத்தொடரை இரு தொடர்களாக்குக.

தனி வாக்கியங்கள்:

  1. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
  2. நான் எழுதுவதற்கு உரிய காரணம் உண்டு.
2). வாழ்வில் தலைக்கனம்,  'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

வாழ்வில் தலைக்கனம்:

பணம், பதவிகளால் வாழ்வில் தலைக்கனம் பிடித்தவர் உலகில் பலர் உண்டு.

தலைக்கனமே வாழ்வு:

அடுத்த வேளை உணவுக்காக, அலுக்காமல் கல் சுமக்கும் சித்தாளுக்கு தலைக்கனமே வாழ்வாகிப் போனது.

3). "காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்" - உவமை உணர்த்தும் கருத்து யாது?

காய் மணியாகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்:

இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே, தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டன போல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.

4). தீவக அணியின் வகைகள் யாவை?
தீவக அணி மூன்று வகைப்படும். அவை: 
  1. முதல் நிலைத் தீவகம் 
  2. இடை நிலைத் தீவகம் 
  3. கடை நிலைத் தீவகம்.
5). 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.  இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், இது நிரல்நிறை அணியாயிற்று.

2 மதிப்பெண் வினாக்கள், இயல் 8

 இயல் 8

2 மதிப்பெண் வினாக்கள்


1). குறிப்பு வரைக. - அவையம்

அவையம்:

அறம் கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. 

அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு.

உறையூரில் இருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  

மதுரைக்காஞ்சி, 'மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது' என்கிறது.


2). காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்தது:

கையிலே வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.


3). 'கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'

அ).அடி எதுகையை எடுத்து எழுதுக.

ஆ)இலக்கணக் குறிப்பு எழுதுக.

 கொள்க, குரைக்க.


விடை:

அ). அடியெதுகை: 'ள்'

கொள்வோர்

ள்வாய்

ஆ). இலக்கணக் குறிப்பு:

கொள்க, குரைக்க - வியங்கோள் வினைமுற்றுகள்


4). குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குறள் வெண்பாவின் இலக்கணம்:

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.  முதல் அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

எடுத்துக்காட்டு:

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


5). வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

கலவைத் தொடர்:

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.

2 மதிப்பெண் வினாக்கள், இயல் 7

 இயல் 7

2 மதிப்பெண் வினாக்கள்


1). வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்குத் விருப்பமான புத்தகங்களை மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.  குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்துவிட்டால் பேரானந்தம் அடைவார்.


2). பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.


விடை:

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.


3). மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

மெய்க்கீர்த்தி பாடப்படுவது நோக்கம்:

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள். அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.


4). பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

பாசவர் - வெற்றிலை விற்பவர் 

வாசவர் - ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்

பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர் 

உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்


5). புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

புறத்திணைகளில் எதிரெதிர்த்திணைகள்:

வெட்சி × கரந்தை 

வஞ்சி × காஞ்சி 

நொச்சி × உழிஞை

2 மதிப்பெண் வினாக்கள், இயல் 6

இயல் 6

2 மதிப்பெண் வினாக்கள்


1). "நேற்று நான் பார்த்த 'அருச்சுனன் தபசு' என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!" என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.

அயற்கூற்று:

முன்தினம் அவன் பார்த்த 'அருச்சுனன் தபசு' என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.


2). சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள்


பொருள்: ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன.  அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.

3). உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' 
காலதூதர் கையில் 'உறங்குவாய் உறங்குவாய்'
 கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

அ) "உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது.  அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!" என்று சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆ) "காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லை பிடித்து, காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக" என்று உறங்கச் சொல்கிறார்கள்.


4). காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும்.  இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்:

நிலம்: முல்லை (காடு)

பெரும்பொழுது: கார்காலம் (மழைக்காலம்)

சிறுபொழுது: மாலை

கருப்பொருள்:

உணவு: வரகு


5). கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மழையின் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

அ) உழவர்கள் வயலில் உழுதனர்.

ஆ) நெய்தல் பூச்செடிகளைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

6). 'கரப்பிடும்பை இல்லார்' இத்தொடரின் பொருள் கூறுக.

கரப்பிடும்பை இல்லார்: 
'தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்' என்பது இதன் பொருளாகும்.

7). தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

தஞ்/சம் - நேர் நேர் - தேமா

எளி/யர் - நிரை நேர் - புளிமா

பகைக்/கு - (நிரை நேர்) - நிரைபு -  பிறப்பு (வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீராகக் கருதி)

8). வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

குறளின் கருத்து:

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

8). பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
 பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

அ). செந்நாப்போதார், உழைத்ததால் கிடைத்த ஊதியத்தைக் கூரான ஆயுதம் என்கிறார்.

ஆ). ஏனெனில், உழைத்ததால் கிடைத்த ஊதியமே, பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.


2 மதிப்பெண் வினாக்கள் இயல் 5

 இயல் 5

2 மதிப்பெண் வினாக்கள்


1). தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நான் கற்க விரும்பும் மொழி பிரெஞ்சு மொழி.

காரணம்: ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமான இலக்கிய நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு மொழியைக் கற்று, அம்மொழி சார்ந்த இலக்கியம், பண்பாடு, தொழில்வளர்ச்சி, கலை அறிவியல் குறித்த செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்புகிறேன்.


2). செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.

அ) அருளைப் பெருக்கு!

       அறிவைத் திருத்து !!

       மயக்கம் அகற்று !!!


ஆ) அறிவுக்குத் தெளிவு தரும் !

       உயிருக்குத் துணையாய் வரும்!!


3). "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த கேண்மையினால் இடைக்காட்டு புலவன் தென்சொல்" - இவ்வடிகளில் கழிந்த பெரும்கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

  • கழிந்த பெரும் கேள்வியினான் - மன்னன் குசேல பாண்டியன்
  • காதல் மிகு கேண்மையினான் - புலவர் இடைக்காடனார்
4). அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர் - பகுதி
த் - சந்தி
ந் - விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

5). இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ இருக்கிறதே ...சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே !மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? - அறியா வினா

மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? - ஐய வினா


2 மதிப்பெண் வினாக்கள் இயல் 4

 இயல் 4

2 மதிப்பெண் வினாக்கள்


1). வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா: செயற்கை நுண்ணறிவு இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

விடை:

அ). செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகுப்பறை ரோபோ ஆசிரியர்.

ஆ). நுட்பமான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவ ரோபோ.


2). மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.  நோயாளி மருத்துவர்பால் கொண்டிருக்கும் இத்தகைய அன்பும் நம்பிக்கையுமே அவரை விரைவிலேயே குணமடையச் செய்யும்.  மருத்துவர் நோயாளி மீது காட்டும் அன்பும் அக்கறையும் அவருக்குக் 'கைராசிக்காரர்' என்ற பெயரைப் பெற்றுத் தரும்.


3). உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவை எனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

எதுவுமே இல்லாத பெருவெளியில் பேரொலியுடன் காற்று முதலான அணுக்களுடன் வளர்கின்ற வானம் தோன்றியது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து நெருப்புப் பந்தாய்ப் பூமி உருவானது. பிறகு பூமி குளிர மழை பெய்தது.  தொடர் மழையால், மீண்டும் மீண்டும் உருவான தொடர் வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது.


4). வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

'வருகின்ற கோடை விடுமுறை' என்பது எதிர்காலம்.  இத்தொடரில் எதிர்காலப் பயனிலையாக 'செல்வேன்' என்று அமைவதற்குப் பதிலாக நிகழ்காலப் பயனிலை 'செல்கிறேன்' என்று வந்துள்ளது.  இங்கே நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து, இது காலவழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.


5). "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிரக் கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.  இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.


"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

2 மதிப்பெண் வினாக்கள், இயல் 3

 இயல் 3

2 மதிப்பெண் வினாக்கள்


1). 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குற்றி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.


வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வகையிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர், நம் முன்னோர்.  இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்துவந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது. இது விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட, விருந்தோம்பல் பண்பே இன்றியமையாதது என்பதைக் காட்டுகிறது.


2). விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

வாருங்கள்... வாருங்கள்... உங்களைக் கண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உட்காருங்கள்! முதலில் சிறிது நீர் பருகுங்கள். நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தது, நான் செய்த பெரும்பேறு. கண்டிப்பாக உணவருந்திவிட்டுதான் நீங்கள் செல்ல வேண்டும்.  உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.


3). 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.

இறடி- தினை; பொம்மல்- சோறு.

இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருள் 'தினைச்சோற்றைப் பெறுவீர்கள்' என்பதாம்.


4). 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடர் ஆனது. 'சிரித்துப் பேசினாள்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?


'சிரித்துப் பேசினாள்' என்பது 'சிரித்துச் சிரித்துப் பேசினாள்' என அடுக்குத்தொடர் ஆகும்.


5). பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?


பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை

நூலகம் சென்றார்-வினைப் பயனிலை

அவர் யார்?- வினாப் பயனிலை.


6). 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் அண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.


7). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். - இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.


கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை


8). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்து போன்று - உயிரினும் ஓம்பப்படும்.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.


விடை:

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப் படும்.

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.


9). எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா மலர்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு


விடை:

அ). கூவிளம் தேமா மலர்


----------------------------------------------